சாம்பியன்ஸ் லீக் :
ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ்
இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
ஜெய்ப்பூர், 03-10-2013 :
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 21–ந்தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. கடைசி லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டில் பெர்த் அணியையும், (ஏ பிரிவு) டிரினிடாட் டொபாக்கோ 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்சையும் (பி பிரிவு) தோற்கடித்தன.
'ஏ' பிரிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. ரன்ரேட்டில் வாய்ப்பை இழந்து ஒட்டோகோ அணி வெளியேறியது. இதேபோல லயன்ஸ், பெர்த் ஸ்கோர்செர்ஸ் அணிகளும் வெளியேற்றப்பட்டன.
'பி' பிரிவில் டிரினிடாட், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு நுழைந்தன. ரன்ரேட்டில் டிரினிடாட் முதல் இடத்தையும், சென்னை சூப்பர்கிங்ஸ் 2–வது இடத்தையும் பிடித்தன. டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (4–ந்தேதி) நடைபெறும் முதல் அரைஇறுதியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் – டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து 3 வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீ ஆட்டத்தில் டிரினிடாட்டிடம் மோசமாக தோற்றது. ஆனால் நாளை அரைஇறுதி ஆட்டம் என்பதால் சென்னை வீரர்கள் முழு திறமையுடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010–ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
ஆனால் அந்த அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எல்லா வகையிலும் சவாலாக திகழும். முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் அந்த அணி லீக் போட்டியில் அனைத்து ஆட்டத்திலும் (4 வெற்றி) வென்று இருந்தது. இதனால் ராஜஸ்தான் அணி சென்னையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் நாளைய அரைஇறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார்ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
5–ந்தேதி டெல்லியில் நடைபெறும் 2–வது அரை இறுதியில் டிரினிடாட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிக்கு நுழைந்த 4 அணிகளில் மூன்று ஐ.பி.எல். அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments