திருவள்ளூர் அருகே தவறான சிகிச்சையால் வாலிபர் சாவு
திருவள்ளூர், அக். 3:–
திருவள்ளூர் அருகே உள்ள மணவாள நகர், கபிலர் நகரை சேர்ந்தவர் கனிசையத். இவரது மகன் லியாகத் அலி (22). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடல் இறக்க நோய் இருந்தது. இதற்காக பெரிய குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நேற்று காலை 7.30 மணி அளவில் டாக்டர்கள் லியாகத் அலிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மாலையில் திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. லியாகத் அலியை மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சோதனை செய்த போது லியாகத் அலி ஏற்கனவே இறந்து இருப்பது தெரிந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இது பற்றி அறிந்ததும் லியாகத் அலியின் உறவினர்களும், நண்பர்களும் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
லியாகத் அலியின் தந்தை கனி சையத் கூறும் போது, ‘‘தனியார் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் மகன் இறந்து உள்ளான். இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இன்று லியாகத் அலி உடல்பரி சோதனை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
0 comments