200–வது டெஸ்டுக்கு பிறகு தெண்டுல்கர் ஓய்வுபெற மாட்டார்: ரவிசாஸ்திரி நம்பிக்கை
மும்பை, செப்.7:–
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் 200–வது டெஸ்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தெண்டுல்கர் 198 டெஸ்டில் இதுவரை விளையாடி உள்ளார். அவரது 200–வது டெஸ்ட் இந்திய மண்ணில் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் தனது 200–வது டெஸ்டை ஆட உள்ளார்.
ஓய்வு குறித்து தான் எதுவும் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தெண்டுல்கர் 2014–ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி வரை விளையாடுவார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
தெண்டுல்கர் எந்த நேரத்திலும் ஓய்வு பெற மாட்டார். அவர் தொடர்ந்து விளையாடுவார். அடுத்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் அவர் விளையாடுவார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. சிறந்த நிர்வாகத்தை கொண்டது. கிரிக்கெட் வாரியம் என்.சீனிவாசன் சிறந்த நிர்வாகி ஆவார். திறமையான விளையாட்டு ஆர்வலர் அவரது பங்களிப்பு மகத்தானது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
0 comments