உத்தரபிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மீண்டும் வேலையில் சேர்ந்தார்: சஸ்பெண்டு உத்தரவு ரத்து
லக்னோ, செப். 13:–
உத்தரபிரதேச மாநில கலெக்டர் துர்க்கா சக்தி நக்பல் மணல் கடத்தலை தடுத்ததால் அரசியல் பிரமுகர்களால் மிரட்டப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஒரு மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து விட்டதாக புகார்கள் எழுந்தது.
உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் இது பற்றி விசாரித்து துர்க்காவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டச்சிக்கல்களும் எழுந்தன.
இதற்கிடையே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்க்கா தவறு செய்யவில்லை என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் உத்தரபிரதேச மாநில அரசு அதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் கலெக்டருக்கும், அரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்தன. அதில் வெற்றி கிடைத்துள்ளது.
இதையடுத்து துர்க்காவின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. துர்க்கா மீண்டும் வேலையில் சேர்ந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது துர்க்கா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஓரிரு மாதங்களில் அவருக்கு வருவாய் துறையில் பணி கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இனி முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தும்படி அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments