தலைவா படத்துக்கு அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு தடை விதித்துள்ளது தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து
சென்னை, ஆக. 10:–
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கேள்வி– பதில் வருமாறு:–
கேள்வி :– நடிகர் விஜய் நடித்து 9-ம் தேதி வெளி வருவதாக இருந்த தலைவா திரைப்படம் வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வருகிறதே?
பதில் :– தலைவா திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் முதல்–அமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடை நாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும். வரி விலக்கு கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் இந்த நிலைதான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலைதான் ஏற்படும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
0 comments