ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலி: டீசல் விலை ரூ.5 உயர்கிறது
புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பார்லிமென்ட் கூட்டத்திற்கு பிறகு இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பணச்சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று மேலும் ரூபாயின் மதிப்பு சரிந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 66.24 ரூபாயாக இருந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. 590.05 புள்ளிகள் சரிவடைந்தது பங்குச்சந்தைகள் நிறைவடைந்தன. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 110 அமெரிக்க டாலரை தாண்டியது. இதன் காரணமாக சாமான்ய மக்கள் மீதான விலையேற்றம் தவிர்க்க முடியாததாக விடும் என கூறப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு காரணமாக டீசல் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு பின் டீசல் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், டீசல் விலை குறைந்த பட்சம் ரூ.5 ஆவது உயர்த்தப்பட வேண்டும். ரூ. 3 உயர்த்த வேண்டும் என்பது அர்த்தமற்றது என கூறினார். இதனிடையே, டீசல் விலை உயர்வு தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அமைச்சரவையை விரைவில் அணுகப்போவதாக கூறப்படுகிறது. நடப்பு நிதிப்பற்றாக்குறை காரணமாக, டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக நிதியமைச்சகமும் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆதே நேரத்தில், மாதம் தோறும் 50 பைசாவுக்கும் அதிகமாக டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரக்கு கட்டணமும் உயர்கிறது:
டீசல் விலை உயரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே சரக்கு கட்டணம் அக்டோபரில் உயர்த்தப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஏற்கனவே ரயில்வே சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. டீசல் விலை உயர்வு காரணமாக அக்டோபரில் மீண்டும் விலை உயர்த்தப்படும். பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என கூறினார்.
0 comments