காதலித்து ஏமாற்றி ரூ.11 லட்சம் மோசடி
ஓட்டல் உரிமையாளர் மகன் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
ஓட்டல் உரிமையாளர் மகன் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார்
சென்னை : ஓட்டல் உரிமையாளரின் மகன் மீது கல்லூரி மாணவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் ஸ்கூல்வியூ சாலையை சேர்ந்தவர் கீர்த்தனா (20). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பிலிம் டெக்னாலஜி படித்து வருகிறேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் எனது நண்பர்கள் மூலம் எல்டாம்ஸ் சாலையில் உள்ள வேலு மிலிட்டரி ஓட்டல் உரிமையாளரின் மகன் செல்வகுமார் என்பவர் அறிமுகம் ஆனார்.
நண்பர்களாக பழகி வந்தோம். பின்பு காதலாக மாறியது. திருமணம் செய்வதாக கூறி சினிமா தியேட்டர் மற்றும் பல இடங்களுக்கு அழைத்து சென்றார். இந்நிலையில், கடந்த ஜூன் 22ம் தேதி செல்வகுமார் என்னிடம் வந்து அவசரமாக ரூ.5 ஆயிரம் தேவைப்படுவதாக கூறினார். கையில் பணம் இல்லாததால் எனது தந்தையின் ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்தேன். இதை பயன்படுத்தி செல்வகுமார் ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் எடுத்து உள்ளார். ஏன் அதிக பணம் எடுத்தாய் என்று கேட்டதற்கு பணம் எடுக்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டேன். இந்நிலையில், கடந்த 2ம் தேதி என் வீட்டருகே நின்று கொண்டு இருந்த செல்வகுமார் என்னுடன் பேசுவதை ஏன் நிறுத்தி விட்டாய் என்று கேட்டார். அதற்கு நான் ஏன் என் தந்தையின் பணத்தை எடுத்து மோசடி செய்தாய் என்று கேட்டேன்.
அதற்கு உன்னை நான் காதலிக்கவில்லை. பணத்திற்காகத்தான் பழகினேன் என்று கூறினார். கூப்பிடும் இடங்களுக்கு வராவிட்டால் உன் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று மிரட்டி சென்றார். ஆகவே, என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments