28 May 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : கன்னிராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் : கன்னிராசி

கன்னி:


(உத்திரம் 2, 3,4, அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்) மென்மையான பேச்சும், நல்ல குணநலமும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்களுக்கு இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்துகொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். பொருளாதார வளம் சிறப்பாக இருந்திருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்திருக்கும்.இந்த நிலையில் இப்போது குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து விலகி 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சுமாரான நிலை. பழைய பலன்களை அவரால் கொடுக்க முடியாது. 10-ம் இடத்தில் குரு பகவான் பற்றி ஜோதிடத்தில் ஈசனாரொருபத்திலே தலையோட்டிலேயிரத்துண்டதும் என்று கூறப்படுகிறது. அதாவது குரு 10-ல் இருக்கும்போது சிவன் பிச்சை எடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. பொதுவாக பத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். சிலர் பதவி இழக்க நேரிடலாம். இவையெல்லாம் பொதுவான பலன்.


                       இதைக்கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். இவ்வளவு கெடு பலன்கள் வருமோ! என்று கவலைகொள்ள வேண்டாம். சிவனுக்கே அப்படியா! என்று கருத வேண்டாம். அந்த நிலை வேறு. உங்கள் நிலை வேறு. குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அந்த 5-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான துலாமில் விழுகிறது. அதன்மூலம் எந்த பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அதோடு மற்ற கிரகங்களின் நிலையை கொண்டும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் உங்கள் ஜாதகத்தில் தசா பலன்கள் சிறப்பாக இருந்தால் நன்மைகள் அதிகம் நடக்க வாய்ப்பு உண்டு.

                                            குருபகவான் 2013 நவம்பர் மாதம் 13-ந் தேதி வக்கிரம் அடைகிறார். 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும் அவர் மிதுன ராசியில்தான் இருக்கிறார். ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் குருவின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவானின் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களைப் பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். மேலும் சனிபகவானின் வக்கிர காலமான 2014 மார்ச் 4 முதல் 2014 ஜுலை 13 வரையிலும் வக்கிரம் அடைகிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் கெடுபலன்கள் நடக்காது. பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பொருளாதார வளம் சீராக இருக்கும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். ஆனாலும் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். செவ்வாய் சாதகமாக அமையும் என்பதால் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. அதற்காக சிறிது கடன் வாங்க நேரிடலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம். ஆனால் அதுவும் நன்மைகே. உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். கடந்த காலம் போல உன்னதமாக பலனை எதிர்பார்க்க முடியாது. வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வீண் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் செவ்வாயின் பலத்தால் பெரும்பாலான காலத்தில் முன்னேற்றம் காண்பர்.

                             வியாபாரிகள் வளர்ச்சி சீராக இருக்கும். சனி மற்றும் குருவின் வக்கிர காலத்தில் தொழில் சிறப்படையும். புதிய வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் அதுவே போதும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசின் வகையில் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. எது எப்படியானாலும் குருபகவான் மற்றும் சனிபகவான் பார்வைகளால் எந்த பிரச்சினையும் வராது. கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம். பொது நல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் ஓரளவு கிடைக்கும். விவசாயிகள் நல்ல பல முன்னேற்றங்களை காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலை தரும். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.

                                  பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் பித்தம், மயக்கம் மற்றும் கண் நோய் போன்ற உபாதைகள் வரலாம்.

பரிகாரம்:- நவகிரகங்களை சுற்றி வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு முல்லை மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டக்கடைலை தானம் செய்யலாம். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்து வாருங்கள். முடிந்தால் ஆலங்குடிக்கு சென்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். திருச்செந்தூர் முருகனையும் வழிபடலாம்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top