ராஜ்நாத்சிங்குடன் எடியூரப்பா சந்திப்பு: பா.ஜனதாவில் சேர ஒப்புதல்
ஷிமோகா, டிச.24:
கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா ஊழல் புகார் காரணமாக பதவி இழந்தார். தனக்கு மீண்டும் முதல்–மந்திரி பதவி கொடுக்காததால் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தலுக்குப்பின் பாடம் கற்றுக்கொண்ட எடியூரப்பா மீண்டும் பாரதீய ஜனதா வில் சேர மேலிடத்துக்கு தூது விட்டார். ஆனால் மேலிட தலைவர்கள் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. அவரை சேர்த்தால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்று தலைவர்கள் கருதினார்கள்.
நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எடியூரப்பா தாமாகவே முன்வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். பெங்களூரில் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பேசியபோது எடியூரப்பா அவரை சந்திக்க முயன்றார். அதுவும் முடியவில்லை. இதனால் எடியூரப்பா ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சொரபா என்ற இடத்துக்கு வந்தார். அங்கு சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேயாவின் தாயார் காலமானார். இதையொட்டி தத்தாத்ரேயாவுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இதை அறிந்த எடியூரப்பா ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு காரில் சொரபா வந்தார். அங்கு ராஜ்நாத்சிங்குடன் சேர்ந்து தத்தாத் ரேயாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ராஜ்நாத்சிங்கை தனியாக சந்தித்தும் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது தன்னை மீண்டும் பாரதீய ஜனதாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பேச்சுவார்த்தையின் போது மாநில பாரதீய ஜனதா பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான், பொதுச்செயலாளர் அனந்தகுமார், ஷிமோகா எம்.பி. ராகவேந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா ‘‘தன்னை பாரதீய ஜனதாவில் சேர்த்துக் கொள்ள ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்’’ என்றார்.
ஆனால் ராஜ்நாத்சிங் இடம் இதுபற்றி கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.
0 comments