3 July 2013

தர்மபுரி காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்: இனிமேல் இளவரசனுடன் வாழ மாட்டேன் - இளம்பெண் திவ்யா அறிவிப்பு

தர்மபுரி காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்
இனிமேல் இளவரசனுடன் வாழ மாட்டேன் 
இளம்பெண் திவ்யா அறிவிப்பு

 

 சென்னை, ஜூலை 3:-

சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"எனது மகள் திவ்யா (வயது 20) கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்துகொண்டார். இதனால் எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், திவ்யா என்னை தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார். எனது மகள் திவ்யாவை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கருதுகிறேன். எனவே திவ்யாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த மார்ச் 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணையின்போது, 'நான் விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன். என்னை யாரும் துன்புறுத்தவில்லை' என்று திவ்யா கூறினார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகளிடம் திவ்யா, 'சமீபத்தில் நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பிப்போய் உள்ளது. எனவே, தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்க விரும்புகிறேன். இளவரசனுடன் இப்போது பேச விரும்பவில்லை' என்று பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா தங்கிக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அறையில் திவ்யா வாக்குமூலம் அளித்தார். பின்னர் வழக்கு விசாரணையை 3-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அறையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது.

திவ்யாவின் தாயார் தேன்மொழி தரப்பில் வக்கீல் ரூபர்ட் பர்ணபாஸ், கே.பாலு ஆஜரானார்கள். தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக ரூபர்ட் பர்ணபாஸ் கூறினார். இதற்கு இளவரசன் தரப்பு வக்கீல் சங்கரசுப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

ஆனால் இளவரசன் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேறு மனுவை தாக்கல் செய்தால் விசாரிக்கலாம். 

இந்த ஆட்கொணர்வு மனுவில் அதை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நாளை மறுநாளில் (5-ந்தேதி) வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

அதன் பின்னர் திவ்யா தனது வக்கீல் கே.பாலுவுடன் வெளியே வந்தார். அங்கு நிருபர்களுக்கு, கே.பாலு அளித்த பேட்டி வருமாறு:-

நீதிபதிகள் அறையில் அளித்த வாக்குமூலத்தில் தாயாருடன் செல்வேன் என்று திவ்யா கூறியிருந்தார். இன்று வழக்கு விசாரணை நடந்தபோது, 'மனுதாரருடன் மகள் வந்துவிட்டதால் மேற்கொண்டு வழக்கை நடத்த மனுதாரர் விரும்பவில்லை. எனவே வழக்கை திரும்பப்பெறுகிறோம்' என்று கூறி, வாபஸ் பெற்றுவிட்டோம்.

திவ்யா தனது தாயாருடன் வரவேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு தொடர்ந்தோம். அது நடந்துவிட்டதால் வழக்கை முடித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திவ்யா கூறியதாவது:-

இளவரசனை விரும்பித்தான் திருமணம் செய்தேன். அதன் பின்னர் அப்பா இறந்துவிட்டார். ஊரிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் அந்த கஷ்டங்களும், அப்பாவின் இழப்பு மட்டும்தான் என் நினைவில் இருந்தன. அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. வேறு எந்த ஆசையும், எண்ணமும் அவர் மீது தோன்றவில்லை.

எனக்கு அப்பாவின் நினைவு மட்டும்தான் உள்ளது. அன்றிருந்த சூழ்நிலையில் என்னால் அங்கிருந்து மீறி உடனே வர முடியவில்லை. எனவேதான் இவ்வளவு நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்துவிட்டேன்.

இளவரசன் வேண்டாம் என்று அப்பா கூறியிருந்த நிலையில், இனிமேல் எந்த சூழ்நிலையிலும் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவுடன் இருந்து எனது அப்பாவின் இடத்தை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன்.

அம்மாவும் வேண்டும், அவரும் வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. நான் எப்போது என்றாலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன்.

ஆனால், இளவசரனுடன் வாழத் தயார் என்று நீதிபதிகளிடம் நான் கூறியதாக எதிர்த்தரப்பினர் தவறான தகவலை வெளியிட்டுவிட்டனர். நான் எனது தாயார், உறவினர்களின் ஆதரவை பெறுவதற்காக, 'நான் செய்தது தவறு' என்று கூறியிருந்த நிலையில், இப்படி ஒரு தவறான தகவலை கொடுத்துவிட்டனர். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன்.


இவ்வாறு அவர் கண் கலங்கியபடி கூறினார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top