ஆசிட் வீச்சில் பலியான வினோதினியின் தாய்
விஷம் குடித்து தற்கொலை
மயிலாடுதுறை :
காரைக்கால் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன்(50). இவரது மனைவி சரஸ்வதி அம்மாள்(44). இவர்களது மகள் வினோதினி(27). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரை கோட்டுச்சேரியை சேர்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ்(30) ஒரு தலையாக காதலித்தார். வினோதினி காதலிக்க மறுத்ததால் கடந்த 2012 நவம்பர் 14ம் தேதி வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் இரண்டு கண்களிலும் பார்வை இழந்து படுகாயமடைந்த வினோதினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12ம் தேதி இறந்தார். வினோதினி இறந்த பிறகு அவரது பெற்றோர் சொந்த ஊரான நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வினோதினியை காதலிப்பதாக கூறிய சுரேஷை ஆரம்பத்திலேயே கண்டித்து இருந்தால் அவர் வினோதினியை கொலை செய்து இருக்க மாட்டார் என கணவரிடம், சரஸ்வதி அடிக்கடி கூறி வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சரஸ்வதி விஷம் குடித்தார். காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு இறந்தார்.
0 comments