இந்தியாவின் முதல்கடற்படை பாதுகாப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
புதுடெல்லி, ஆக. 3:
இந்தியக் கடற்படைக்கான இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஜிசாட்-7 பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன்ஸ்பேசின் ஏரியன் 5 ராக்கெட் இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு சுமந்து சென்றது. இந்திய பாதுகாப்பு பணிக்காக அர்ப்பணிக்கப்படும் முதல் விண்கலம் இதுவாகும்.
கடற்படைக்குரிய தகவல் தொடர்புடன் இணைக்கும் விதமாக இந்த விண்கலத்தின் அலைவரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இதனைத் தயாரித்த பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அனைத்தும் இந்த விண்கலத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தகவல் அடிப்படையின் கீழ் இது முக்கியமான அம்சமாகும் என்றும் அவர் கூறினார்.
இதுநாள் வரை, பொதுவான பார்வைக்கோட்டிலேயே கடற்படை பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வந்தது. உலக மொபைல் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளே இங்கு பயன்பாட்டில் இருந்தன. கடற்படை தங்களுக்கென தனியானதொரு ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டுமென்று கருதியதால், இந்தப் புதிய விண்கலம் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று மூத்த விண்வெளி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்
185 கோடி மதிப்பீட்டிலான இந்த விண்கலத்தை கடற்படைக்கான பிரத்யேக செயல்பாடு என்று இஸ்ரோ பதிவு செய்யாத போதிலும், தனிப்பட்ட முறையில் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்கின்றது.
0 comments