இந்தியா-ஆஸி. 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
மழையால் கைவிடப்பட்டது
ராஞ்சி, அக். 23:
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று மாலை தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. சர்மா 9 ரன்களுடனும், தவான் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. ஆடுகளம் மீது தார்ப்பாய் போடப்பட்டிருந்தது. மழை ஓரளவு விட்டதும் ஆடுகளத்தின் மீது தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்ததால், பந்துவீச முடியாத அளவுக்கு ஆடுகளம் ஈரமாகிவிட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 5-வது போட்டி கட்டாக்கில் 26-ம் தேதி நடக்கிறது.
0 comments