22 September 2013

சினிமா ஒரு அபூர்வமான உலகம்: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சினிமா ஒரு அபூர்வமான உலகம்: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு


சென்னையில் நேற்று இரவு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்–அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி. சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை.

38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்’பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.

அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல்.

இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:–

‘சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர்.

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களைவிட பெரிய அளவில் வளர வேண்டும்.’

மேற்கண்டவாறு கமல்ஹாசன் பேசினார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top