கொன்று புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட
நர்சிங் மாணவி 82 நாளுக்கு பின் மீட்பு
நர்சிங் மாணவி 82 நாளுக்கு பின் மீட்பு
கன்னியாகுமரி:
கொன்று புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட குமரி நர்சிங் மாணவி கார் டிரைவரை திருமணம் செய்து சென்னையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி அருகே உள்ள லீ புரத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மகள் ஸ்டாலின் ஜானா (20). திங்கள்சந்தை அடுத்த நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஸ்டாலின் ஜானா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் மாணவி ஸ்டாலின் ஜானாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே மாணவியின் தாயார் தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 19ம் தேதி ஐகோர்ட் கண்டத்தை தொடர்ந்து மாணவியை போலீசார் தீவிரமாக தேட துவங்கினர். அப்போது ஸ்டாலின் ஜானாவுக்கும், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் இசக்கிமுத்துவுக்கும் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.
தற்போது இசக்கிமுத்துவின் பெற்றோர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டதால், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நெல்லை விரைந்தனர். அங்கு வீரவநல்லூரில் இருந்த இசக்கிமுத்துவையும், ஸ்டாலின் ஜானாவையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை நேற்று அதிகாலை கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இருவரையும் போலீசார் மதுரை ஐகோர்ட் கிளையில் நாளை ஆஜர்படுத்துகிறார்கள்.
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட ஸ்டாலின் ஜானா, உயிருடன் திரும்பி வந்தது அவரது உறவினர்களுக்கு மட்டுமின்றி போலீசாருக் கும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவு வாழ்க்கை ஏன்?:
82 நாட்களுக்கு பின் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ள ஸ்டாலின் ஜானா போலீசில் கூறியிருப்பதாவது: நானும், இசக்கிமுத்துவும் 2 வருடங்களாக காதலித்து வந்தோம். நண்பர்கள் உதவியோடு, அம்பை கோயிலில் திருமணம் செய்தோம். திருமணத்துக்கு பின் இங்கு இருந்தால் பிரித்து விடுவார்கள் என பயந்து இருவரும் சென்னைக்கு சென்றோம். மணலியில் வசித்து வந்தோம்.
நான் மாயமான பிரச்னை, இவ்வளவு பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என நினைக்கவில்லை. என் பெற்றோருக்கு மட்டுமில்லாமல், போலீசார், உறவினர்கள், நண்பர்களுக்கும் பெரும் சிரமத்தை கொடுத்துவிட்டோம். என்னை பற்றி வந்த செய்திகளை கவனிக்கவில்லை. அப்படி கவனித்து இருந்தால் அப்போதே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி இருப்போம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
0 comments