ஐஜியிடம் ஊட்டி பெண் புகார் திருமணம் செய்வதாக ஏமாற்றிய கிருஷ்ணகிரி எஸ்ஐ கைது
ஊட்டி : தர்மபுரியை சேர்ந்தவர் சக்திவேல் (29). தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப சப்,இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் பணியாற்றினார். தற்போது கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஊட்டியில் பணியாற்றியபோது ஊட்டி அருகேயுள்ள மசினகுடி பகுதியை சேர்ந்த நிஷா (35) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் சில காலம் கணவன்,மனைவியாகவே வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மேலும், சக்திவேலும் இரு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரிக்கு பணி மாற்றம் பெற்று சென்றுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் எவ்வித தொடர்பும் இன்றி இருந்துள்ளனர். இந்நிலையில், சக்திவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதனை எப்படியோ அறிந்துகொண்ட நிஷா, இதுபற்றி மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சனிடம் நேரடியாக சென்று புகார் மனு அளித்தார்.
அதில், தன்னை ஒரு எஸ்.ஐ., ஏமாற்றிவிட்டதாகவும், மேலும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி தன்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும். மேலும், தன்னை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பெற்றுச்சென்றுள்ளதாகவும், அதனை பெற்றுத்தரும்படியும் மனுவில் கூறியிருந்தார்.
இதுபற்றி உரிய விசாரணை நடத்தும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு ஐ.ஜி உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 7ம்தேதி ஊட்டி ஜி1 காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் டிஎஸ்பி. அனிதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலுக்கும், நிஷாவிற்கும் தொடர்பு இருந்ததை இருவரும் ஒத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிஷாவின் புகாரை ஏற்று ஊட்டி ஜி1 காவல்நிலையத்தில் எஸ்ஐ., சக்திவேல் மீது, திருமண ஆசை காட்டி ஏமாற்றியது மற்றும் வரதட்சணை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நிஷாவின் புகாரை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த சக்திவேலின் திருமணம் தடைபட்டது. அத்துடன், நிஷாவின் புகாரை தொடர்ந்து ஊட்டி போலீசார் நேற்று சக்திவேலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர். விசாரணையின்போது நிஷாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதாக சக்திவேல் கூறினார். இதுதொடர்பாக தனியாக ஒரு புகார் மனுவும் இதே காவல்நிலையத்தில் அளித்தார். ஆனால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
0 comments