ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 492 ரன்கள் குவிப்பு
லண்டன், ஆக. 23-
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் ஷேன் வாட்சனின் (176 ரன்) சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் சுமித் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று மழையால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் தொடங்கியது. ஸ்டீவன் சுமித், தொடர்ந்து நேர்த்தியாக ஆடினார். முந்தைய நாள் விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட சிடில் 23 ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்து பிராட் ஹேடின் களம் புகுந்தார். இருவரும் அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர்.
அபாரமாக ஆடிய ஸ்டீவன் சுமித், ஜோனதன் டிராட்டின் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். ஆனால் அதே ஓவரில் ஹேடின் (30 ரன்) கிளீன் போல்டு ஆனார்.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 492 ரன்கள் குவித்திருந்தபோது ‘டிக்லர்’ செய்வதாக அறிவித்தது. ஸ்டீவன் சுமித் 138 ரன்களுடன் (16 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 32 ரன்கள் எடுத்திருந்தது. அணியில் கேப்டன் கூக் 17 ரன்களுடனும், ரூட் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
0 comments