வேடசந்தூர் அருகே பள்ளி மாணவி எலும்பு கூடு
தாய்-தந்தையிடம் தீவிர விசாரணை
வேடசந்தூர், செப்.11:-
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள பாலப்பட்டி கிராமம் புது அழகாபுரியை சேர்ந்த நாச்சிமுத்து மகள் நித்யா (16). இவர் இதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி மாலை தான் அணிந்திருந்த தங்க மோதிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை வீட்டில் கழற்றி வைத்து விட்டு கையில் டார்ச் லைட் மட்டும் எடுத்துக்கெண்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாச்சிமுத்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடந்த 2 வருடமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்பு கூடு கிடப்பதாக அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். எலும்பு கூடு மீது சில ஆடைகளும் இருந்ததால் காணாமல் போனவர்கள் பற்றி புகார் தெரிவித்தவர்கள் விலாசங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது நாச்சிமுத்து மற்றும் அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகிய 2 பேரையும் வரவழைத்து இந்த எலும்பு கூடின் மீது சுற்றப்பட்டிருந்த ஆடையை காட்டினர். அவர்கள் இது தனது மகள் நித்யா காணாமல்போன அன்று அணிந்திருந்த உடைதான் என்று உறுதி செய்தனர்.
இதனையடுத்து வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் விமலா தலைமையில் மருத்துவ குழுவினர் குடகனாற்றில் கிடந்த எலும்பு கூடு மற்றும் மண்டை ஓடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதனை சேகரித்து சென்னையில் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோதனையின் முடிவில்தான் இறந்தது மாணவி நித்யாவா? என்று உறுதியாக தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்துமேலும் கூறும்போது, குடகனாறு அணையின் உட்பகுதியில் கிடந்த எலும்பு கூடு காணாமல்போன மாணவி நித்யாவின் உடல்தான் என்று தற்போது அவரது பெற்றோர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் சென்னையில் ஆய்வக பரிசோதனைக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும். 2 வருடத்துக்கு முன்பு மாயமான மாணவி யாரையேனும் காதலித்து அவருடன் மாயமாகி பின்னர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்து அவரது உடலில் கல்லை கட்டி அணையின் நடுப்பகுதியில் வீசி சென்று விட்டார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அவரது பெற்றோர்களிடம் மாணவி நித்யாவுக்கு நெருக்கமாக இருந்த தோழிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் குறித்து கேட்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
0 comments