30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் கோ– ஆப்டெக்சில்
துணிகள் வாங்க சுலப சேமிப்பு திட்டம்
கலெக்டர் தகவல்
இராமநாதபுரம்:
கோ– ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி திருநாள் சிறப்பு விற்பனையை கலெக்டர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி மற்றும் சுலப சேமிப்பு திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கோ– ஆக்டெக்சில், தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்டம் கலெக்டர் நந்தகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இராமநாதபுரம் கோ– ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளரின் மனதை கவரும் வகையில் பல புதிய வடிவமைப்பில் புதிய ரகங்களை தருவித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் வாங்கி உடுத்தி கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலையில் தூயபட்டு புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுபமுகூர்த்த திருநாட்களை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகள் தருவிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் காஞ்சி புரத்து நெசவாளர் சங்க உற்பத்தி விலைக்கே விற்கப்படுவதுடன் அரசு தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. இப்புடவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3500 விலை வரை தருவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை திருநாளை முன்னிட்டு பருத்தி நூலால் நேர்த்தியாக நெய்யப்பட்ட புடவைகள், ஜரிகை வேலைப்பாடு கொண்ட காட்டன் புடவைகள், கைத்தறி புடவைகள், சுடிதார் மற்றும் ஆயத்த ஆடைகள், மேலும் கைத்தறி ரகங்களான வேட்டிகள், லுங்கிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், கால் மிதிகள் மற்றும் இதர ரகங்களும் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி விற்பனைக்கு அரசு சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வழங்குவதுடன் மற்றும் அனைத்து தரப் பினரும் சுலபமான முறையில் பட்டு மற்றும் பருத்தி ரகங்கள் வாங்கி பயனடையும் வகையில் சுலப சேமிப்பு திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத் தப்படுகிறது. இத்திட்டத்தில் மாத தவணையாக ரூ.100 முதல் ரூ.1000 வரை செலுத்தலாம். மொத்தம் 10 தவணையில் 9 தவணைகள் மட்டும் கட்டினால் போதுமானது. அத்துடன் அரசு தள்ளுபடியும் உண்டு. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கடன் விற்பனை வசதி உண்டு. தீபாவளி பண்டிகை வரை அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
துவக்க விழா நிகழ்ச்சியில் கோ–ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யான், சுந்தரி, துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) சூரியநாராயணசாமி, துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ராஜப்பா, விற்பனை மேலாளர் பூவேலன், மேலாளர் தர்மராஜ், கோ– ஆக்டெக்ஸ் விற்பனை நிலையம் மற்றும் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments