சின்சினாட்டி டென்னிஸ்
செரீனா வில்லியம்சை வீழ்த்தி அஸரென்கா சாம்பியன்
சின்சினாட்டி, ஆக. 20:
சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா, நம்பர் ஒன் வீராங்கனை செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), 2–ம் நிலை வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள்.
2½ மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் அஸரென்கா 2–6, 6–2, 7–6 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
54 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ள 31 வயதான செரீனாவுக்கு சின்சினாட்டி பட்டம் மீண்டும் எட்டாக்கனியானது.
15 முறை செரீனாவுடன் மோதி இருக்கும் அஸரென்கா பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். இந்த ஆண்டில் அஸரென்கா வென்ற 3–வது பட்டம் இதுவாகும். மொத்தத்தில் 17–வது பட்டமாகும். சின்சினாட்டி பட்டத்தை அஸரென்கா வெல்வது இதுவே முதல்முறையாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் 3–ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 22–ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7–6, 7–6 என்ற நேர்செட்டில் ஜான் இஸ்னரை வீழ்த்தி முதல் முறையாக சின்சினாட்டி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த சீசனில் மான்ட்ரியல், சின்சினாட்டி என அடுத்தடுத்து பட்டம் வென்றுள்ளதால் நடால் அமெரிக்க ஓபன் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெற்றிக்கு பின்னர் நடால்
கூறுகையில், ‘களிமண் தரை ஆடுகளம் மட்டுமின்றி கடின தரையிலான ஆடுகளத்திலும்
என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
0 comments