ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு சிபிஐ விசாரணை இல்லை
சென்னை :
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்து தள்ளுபடி செய்தது.
சேலம் மாவட்டம் அத்தம்பட்டி அருகே பாஜ மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், கடந்த 19ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி அவரது நண்பர் மனோகரன், சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார். மனோகரன் சார்பாக அவரது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2012ம் ஆண்டு முதல் பாஜ மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை எந்த வழக்கிலும் துப்பு கிடைக்கவில்லை. கடந்த 1ம் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் உளவுத்துறை செயல் இழந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அளிக்கப் படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. ஆடிட்டர் ரமேஷ் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர் வால் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் நேற்று தள்ளுபடி செய்தது. ‘ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கில் தொடர்புடைய சில குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். புலன்விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது. என வே, வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
0 comments