பாதுகாப்புத்துறையும் தப்பவில்லை இணையதளங்களில் சமூக விரோதிகள் ஊடுருவல்
பெங்களூர்: கடந்த மூன்றரை ஆண்டுகளில் பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களில் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநில முதல்வர் இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்திய கனிப்பொறி அவசர நடவடிக்கைக் குழு நடத்திய ஆய்வின் முடிவில், இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் சுமார் 1,030 இணையதளங்களில் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியானது.
இதில் 2010ம் ஆண்டு 303 அரசு இணையதளங்களிலும், 2011ம் ஆண்டு 308 இணையதளங்களிலும், 2012ம் ஆண்டு 371 இணையதளங்களிலும், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 48 அரசு இணையதளங்களிலும் ஊடுருவல் நடத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஊடுருவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஏற்கனவே மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். பெரும்பாலான ஆப்பரேட்டிங்க் சிஸ்டங்கள் தனியார் நிறுவனங்களாலும், இதுதவிர வெளிநாடுகளிலும் உருவாக்கப்பட்டதாகும். இதுதான், இந்த ஊடுருவல் பாதிப்புகளுக்கு காரணம் என்று பொதுவான கருத்து நிலவியது.இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் பரிந்துரைப்படி, 2010ம் ஆண்டு உள்நாட்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இது ராணுவப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய அரசின் முக்கிய துறைகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த சிக்கலான வேலையை பெங்களூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் திட்டத்தில், தற்போது முன்னேற்றங்கள் காணப்பட்டு வந்தாலும், இது முழுமையாக நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இதில் இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) ஆகியவற்றின் நுண் அறிவாளர்கள் கொண்ட குழுவும் இணைந்து, டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
0 comments