இராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது லாரி மோதல்: மாணவி பலி
பனைக்குளம், செப். 13:–
இராமநாதபுரம் அருகே உள்ள குப்பான்வலசையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது35), ஆட்டோ டிரைவர். இவருக்கு அக்ஷயா (7), பூஜா (5) என்ற 2 மகள்களும், தருண் என்ற மகனும் உள்ளனர்.
அக்ஷயா அங்குள்ள பள்ளி ஒன்றில் 2–ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை கிருஷ்ணன் தனது ஆட்டோவில் 3 குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து சென்றார். காரிகூட்டம் அருகே சென்ற போது இராமநாதபுரத்தில் இருந்து இராமேசுவரம் நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. உள்ளே இருந்த மாணவி அக்ஷயா அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்தில் கிருஷ்ணன், பூஜா, தருண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் அந்த லாரி அருகில் இருந்த நிழற்குடை மீதும் மோதியது. இதில் நிழற்குடை சரிந்து விழுந்து கல்லூரி மாணவர்கள் முகமது அனாசு, உபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பூஜா, தருண் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிருஷ்ணன், கல்லூரி மாணவர்கள் முகமது அனாசு, உபர் ஆகியோர் இராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள னர்.
இந்த விபத்தால் மதுரை– இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக இதம்பாடல் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
0 comments