22 December 2013

இராமநாதபுரம் அருகே வீடு புகுந்து கணவன், மனைவி கடப்பாரையால் குத்திக்கொலை

இராமநாதபுரம் அருகே பயங்கரம்: 
வீடு புகுந்து கணவன், மனைவி கடப்பாரையால் குத்திக்கொலை 
போதை வாலிபரின் வெறிச்செயல் 



ஆர்.எஸ்.மங்கலம்:

இராமநாதபுரம் அருகே குடிபோதை வெறியால் வீடு புகுந்து கடப்பாரையால் குத்தி கணவன், மனைவி கொலை செய்யப்பட்டனர். தடுக்க வந்த பெண்கள் உள்பட 5பேரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மது அடிமையை போலீசார் கைது செய்தனர்.

போதை அடிமை

இராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ஏ.ஆர்.மங்கலத்தை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் பழனிவேல் (வயது32). விவசாயி. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் மது குடித்துவிட்டு வந்து அக்கம்பக்கத்தில் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து வீடு முன் தெருவில் தகராறு செய்துள்ளார்.

அப்போது அவரது கையில் கடப்பாரையும் இருந்தது. தெருவில் வருவோர் போவோரிடம் தகராறு செய்து கொண்டிருந்த பழனிவேல் திடீரென்று பக்கத்து வீட்டுக்குள் புகுந்தார். அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த சுப்பிரமணியன் (65), அவரது மனைவி காளியம்மாள்(58) ஆகியோரை சரமாரியாக கடப்பாரையால் தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த அவர்கள் அலறினர். இவர்களது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பழனிவேலை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களையும் கடப்பாரையால் பழனிவேல் தாக்கி உள்ளார்.

கணவன், மனைவி கொலை

இதனால் அருகில் சென்று அவரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அங்கு ஏராளமானோர் கூடியதைத் தொடர்ந்து பழனிவேலை வெளியே விரட்டி விட்டனர். அவரை பிடிக்க முயன்ற போது கடப்பாரையால் தாக்கியதில் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தியம்மாள், தனசேகரன், காளீஸ்வரி, நாகவள்ளி, நாகரத்தினம் ஆகிய 5பேரும் காயம் அடைந்தனர்.

இந்தநிலையில் கடப்பாரையால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த காளியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். படுகாயம் அடைந்த அவரது கணவர் சுப்பிரமணி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வேனில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து போனார்.

குடிபோதை வெறியால் பாதிப்பு

காயமடைந்த பாப்பாத்தியம்மாள், தனசேகரன், காளீஸ்வரி, நாகவள்ளி, நாகரத்தினம் ஆகிய 5பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதைக்கு அடிமையானவரின் திடீர் வெறியால் கடப்பாரையால் தாக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்து கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top