கடைசி ஒரு நாள் போட்டி
இந்தியா அபார வெற்றி பெற்று
ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது
புலவாயோ, ஆக.3:
இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங்செய்ய அழைத்தார்.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, அம்பதி ராயுடுக்கு பதிலாக தவான், ரஹானே சேர்க்கப்பட்டனர். காஷ்மீரை சேர்ந்த புதுமுக வீரர் பர்வேஸ் ரசூலுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சிபாண்டா- மசகட்ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாண்டா 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ஜிம்பாப்வே 163 ரன்களில் ஆட்டம் இழந்தது. அந்த அணியின் வி்ல்லியம்ஸ் அதிகபட்சமாக 51 ரன் எடுத்தார். மசகட்ஷா 32 ரன் அடித்தார். இந்திய அணி தரப்பில் மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவில் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா மற்றும் தவான் களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன்பின் ரஹானே களம் இறங்கி தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவட் ஆனார். அவர் 38 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸரும் அடித்திருந்தார்.
அடுத்து களம் இறங்கிய ஜடேஜா, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். ராஹானே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் கார்த்திக் களம் இறங்கினார்.
இறுதியில் இந்திய அணி 34.0 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 48 ரன்னிலும், கார்த்திக் 10 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.
0 comments