உலக வில்வித்தையில் தீபிகா குமாரிக்கு வெள்ளிப்பதக்கம்
பாரிஸ், செப்.23:
உலக கோப்பை வில்வித்தை போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவின் அரைஇறுதியில் அலெஜாண்ட்ரா வலேன்சியாவை (மெக்சிகோ) நேற்று தோற்கடித்த இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இரவில் நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் கொரியாவின் யுன் ஓகே ஹீயிடம் மோதினார். இதில் தொடக்கத்தில் 3-1 என்று முன்னிலை வகித்த தீபிகா குமாரி, அதன் பிறகு வாய்ப்புகளை கோட்டை விட்டு 4-6 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
இதனால் 19 வயதான ஜார்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி இந்த முறையும் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. 2011, 2012-ம் ஆண்டு உலக போட்டியிலும் அவருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
0 comments