இந்தியா ‘ஏ’ அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரை வென்றது
பிரிட்டோரியா, ஆக. 14:-
இந்தியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பிரிட்டோரியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 243 ரன்களில் (49.2 ஓவர்) சுருண்டது. கடைசி லீக் ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய ஷிகார் தவான் 62 ரன்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 73 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால் இந்திய அணி 250 ரன்னை எட்டவில்லை. கடைசி 5 விக்கெட்டுகள் 14 ரன்களுக்குள் வீழ்ந்தது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஜோஷ் ஹாசில்வுட், நாதன் கவுல்டர் நைல் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினர். ஹாசில்வுட், கவுல்டர் நைல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், மிடில் ஆர்டரில் ரன்களை கட்டுப்படுத்திய ஆல் ரவுண்டர் ஹென்ரிக்ஸ், 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்க, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி, 53 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
விக்கெட்டுகளை காப்பாற்ற போராடிய ஹென்ரிக்ஸ் (20), ஹாசில்வுட் (30), பெயின் (47) ஆகியோரும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி, 46.3 ஓவர்களில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி,
கோப்பையை கைப்பற்றியது.
0 comments