'நர்த்தகி' சினிமா பட நடிகை கல்கி
பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்
புதுச்சேரி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் (35). இந்தியாவின் முதல் திருநங்கை தொழிலதிபர். ‘சகோதரி‘ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். `நர்த்தகி‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவரது சேவைக்காக அமெரிக்க அரசின் விருந்தினராக 2010ல் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையிலும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுவையை அடுத்துள்ள ஆரோவில் கோட்டக்கரை கிராமத்தில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார்.
கடந்த 2ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு பெரியமுதலியார்சாவடியில் இருந்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். குயிலாப்பாளையம் அருகே பாலத்தில் இருட்டான பகுதியில் அவர் சென்றபோது பைக்கில் 2 பேர் பின்தொடர்ந்துள்ளனர். திடீரென, முந்திச் சென்று கல்கியை வழி மறித்து பலாத்காரம் செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கல்கி போராடியதில், மொபட்டில் இருந்து கீழே தள்ளியதால் காயம் ஏற்பட்டது. உடனே, 2 வாலிபர்களும் தப்பினர். காயமடைந்த கல்கி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து ஆரோவில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments