ஐபிஎல் சூதாட்டத்தில் திருப்பம் ராஜஸ்தான் வீரர் அப்ரூவர் ஆகிறார்
புதுடெல்லி:
ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த அணியின் மற்றொரு வீரரான சித்தார்த் திரிவேதியிடமும் விசாரித்தனர். இவர் வேகப்பந்து வீச்சாளர். சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்,. அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் பற்றியும், தரகர்கள் பற்றியும் போலீசாரிடம் இவர் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்தார். இந்த வீரர்கள் தன்னையும் சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்தியதாகவும், தரகர்கள் பரிசுப் பொருட்களை கொடுத்து வளைத்து போட முயன்றதாகவும், அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டதாகவும் இவர் கூறினார். இதனால், அவரை அரசு தரப்பு சாட்சியாக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி சித்தார்த் திரிவேதி அரசு தரப்பு சாட்சியாக மாறி, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 164வது பிரிவின் கீழ், டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தார்.
அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 2010, 2013 மற்றும் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட அஜித் சாண்டிலா மற்றும் தரகர்கள் தன்னை தூண்டியதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் திரிவேதி ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும், தரகர்கள்தான் திரிவேதியை தொடர்பு கொண்டு பரிசு பொருட்களை கொடுத்து ஸ்பாட் பிக்சில் ஈடுபட தூண்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர் வின்டு தாராசிங், குருநாத் மெய்யப்பனின் போலீஸ் காவலை மும்பை நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது. வின்டு தாராசிங் & குருநாத் இடையே பாலமாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால், விசாரணைக்காக மும்பை குற்றப் பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று ஆஜரானார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
0 comments