சேரன், மகள் தாமினி இருவரிடம் நீதிபதிகள் விசாரணை;
தந்தையுடன் செல்ல மாட்டேன் என்று தாமினி திட்டவட்டம்
சென்னை:
டைரக்டர் சேரன், மகள் தாமினியிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரணை நடத்தினர். தந்தையுடன் செல்லமாட்டேன் என்று தாமினி திட்டவட்டமாக கூறிவிட்டார். வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.
முதலில் சம்மதம்
சென்னை ஐகோர்ட்டில் சூளைமேடு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி அம்மாள் (வயது 58) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நான் சினிமா இயக்குனர் சேரனின் மகள் தாமினியின் (20) மாமியார். எனக்கு இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். எனது வாழ்க்கை சினிமாத்துறையுடன் தொடர்புடையது. எனது இளைய மகன் சந்துரு நன்றாக நாட்டியம் ஆடுவான். அவரது ஆட்டத் திறமையைக் கண்டு அவர் மீது தாமினி 4.6.11 அன்று காதலில் விழுந்தார்.
அன்றைய தினத்தில் இருந்து இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினர். தாமினி 13.11.93 அன்று பிறந்தவர். சந்துரு 30.8.88 அன்று பிறந்தவர். காதல் தெரிந்ததைத் தொடர்ந்து, சந்துருவுக்கு தாமினியை திருமணம் செய்துகொடுப்பதற்கு சேரன் சம்மதித்தார்.
அடைத்து வைத்துள்ளனர்
வைஷ்ணவா கல்லூரியில் தாமினி தனது படிப்பை முடித்ததும் திருமணத்தை நடத்தலாம் என்று கூறினார். நானும், எனது குடும்பத்தினரும் இதற்கு சம்மதித்தோம். இந்த நிலையில் தாமினி சற்று மனமுடைந்ததைத் தொடர்ந்து அவரை சினிமா மற்றும் சில இடங்களுக்கு சந்துரு அழைத்துச் செல்வதற்கு சேரன் கேட்டுக்கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் சந்துருவை கொலை செய்ய சேரன் முயற்சித்தார். சந்துரு தப்பி, சென்னையை விட்டு கோவைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் 2–ந் தேதி காலை 8.45 மணிக்கு எங்கள் வீட்டுக்கு தாமினி வந்தார். சந்துருவை மறந்துவிடும்படி சேரன் தொந்தரவு செய்வதாகவும், தன்னை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் தாமினி கூறினார்.
என்னுடன் வர விருப்பம்
மேலும் சந்துருவை மறந்துவிடுவதற்காக கேரளா நம்பூதிரியை அழைத்து பூஜை நடத்தியிருக்கிறார். எனவே தாமினியை பாதுகாப்பதற்கு முடிவு செய்தேன். ஆனால் போலீசார் அவரை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டனர். தற்போது போலீஸ் பாதுகாப்பில் தாமினி இருக்கிறார். அவருக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய துணை போலீஸ் கமிஷனர் ஆலோசனை வழங்கி வருகிறார்.
பின்னர் அவரை சேரனிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சேரனுடன் செல்லமாட்டேன் என்று தாமினி பிடிவாதமாக இருந்துவிட்டார். மேலும் என்னுடன் வந்துவிடுவதற்கு தாமினி விருப்பம் தெரிவித்தார்.
உயிருக்கு ஆபத்து
ஆனால் சினிமா பிரமுகர்கள் சிலரும், அவரது சங்கத்தைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து தாமினியை பிரித்துவிட்டனர். மைலாப்பூர் அரசு இல்லத்தில் அடைப்பதாக கூறினர். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
போலீசாரின் செயல்பாடு சட்டவிரோதமானது. சேரனுக்கு தேவையில்லாமல் ஆதரவு காட்டுகின்றனர். இவர்களால் தாமினியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் பிடியில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிற்பகலில் ஆஜர்
நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்னிலையில் மனுதாரர் தரப்பு வக்கீல் சங்கரசுப்பு ஆஜரானார். அப்போது நீதிபதிகள், தாமினியை பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து சேரன், அவரது மனைவி, மூத்த மகள் கோர்ட்டுக்கு வந்தனர். மேலும் சினிமா துறையைச் சேர்ந்த அமீர், விக்கிரமன், தருண்கோபி, ஆர்.கே.செல்வமணி, கரு பழனியப்பன், சீமான் உள்பட ஏராளமானோர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
பல விஷயங்கள் பேசவேண்டும்
சந்துருவின் தாயார், சகோதரிகள் மற்றும் குடும்பத்தினரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். மேலும் தாமினியை ஆஜர்படுத்துவதற்காக போலீசாரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இதனால் கோர்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஈஸ்வரியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதும் சேரன் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜரானார்கள். இந்த மனு மீதான விசாரணையின்போது பல விஷயங்கள் பேசவேண்டியதுள்ளது. அவற்றை எல்லோரது முன்னிலையில் கூற முடியாது. எனவே நீதிபதி அறைக்குள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று என்.ஆர்.இளங்கோ கூறினார்.
மேடையில் விசாரணை
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, தாமினியின் விருப்பத்துக்கு மாறாக அவரை அரசு இல்லத்தில் அடைத்துள்ளனர். அங்கு வேறு சில தொழிலில் இருந்து மீட்கப்படும் பெண்களும் அடைக்கப்படுகின்றனர். தாமினியிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டு நீதிபதிகளும் ஆலோசித்த பிறகு, ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து விசாரித்தனர். மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் சங்கரசுப்பு ஆகியோரை மேடைக்கு அழைத்து நீதிபதிகள் தனியாக பேசினார்கள். பின்னர் தாமினியிடம் நீதிபதிகள் சுமார் 5 நிமிடங்கள் பேசினர்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகளிடம் தனியாக பேச சேரன் மற்றும் அவரது மனைவி விருப்பம் தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் அனுமதித்ததும் மேடைக்குச் சென்று இருவரும் நீதிபதிகளிடம் முறையிட்டனர்.
பின்னர் தாமினியை மீண்டும் அழைத்து நீதிபதிகள் பேசினர். அதைத் தொடர்ந்து மீண்டும் சேரன், அவரது மனைவி ஆகியோரை நீதிபதிகள் அழைத்துப் பேசினர். அப்போது பேச முடியாமல் சேரனின் மனைவி கதறி அழுதார்.
தந்தையின் பார்வையை தவிர்த்தார்
அதைத் தொடர்ந்து வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்தை நீதிபதிகள் அழைத்து பேசினர். தாமினியை அவரது பாதுகாப்பில் அழைத்துச் செல்வதற்கு பிரசாத் சம்மதம் தெரிவித்தார். போலீசாரையும் உடன் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் தம்பிதுரை வாதிட்டார். ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
கோர்ட்டில் ஆஜரானபோதும், வழக்கு விசாரணையின் போதும், நீதிபதிகள் அழைத்து பேசியபோதும் தாமினியின் முகபாவத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், பெற்றோரே கண்கலங்கி தன் முன்னால் பிரதிவாதியாக நின்றுகொண்டிருந்தாலும், அதற்கெல்லாம் அவர் வருத்தப்பட்டதாக தெரியவில்லை.
உணர்ச்சிகளை உள்ளடக்கிக்கொண்டு தாமினி பெரும்பாலும் தலைகுனிந்தபடி இருந்தார். மகள் தாமினியை சேரன் பார்த்தபடியே இருந்தார். ஆனால் தந்தை சேரனின் பார்வையை கூடியமட்டும் தாமினி தவிர்த்தார்.
திருமணமாகவில்லை
சுமார் அரைமணி நேரம் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
இந்த மனு மீதான விசாரணையின்போது தாமினியை அழைத்துப் பேசினோம். தனக்கு திருமணமாகவில்லை என்று தாமினி கூறினார். பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும், மனுதாரர் ஈஸ்வரியுடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் இதற்கு தாமினியின் பெற்றோர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
வக்கீலின் பாதுகாப்பு
ஈஸ்வரியுடன் தாமினியை அனுப்பிவிடக்கூடாது என்பதில் சேரன் உறுதியாக இருந்தார். அதனால் தனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். எனவே இரு தரப்பினருக்கும் பொதுவான இடத்தில் தாமினியை தங்கச் சொல்லலாம் என்று இருதரப்பு வக்கீல்களும் சம்மதம் தெரிவித்தனர்.
தாமினி பெரிய பெண் என்பதாலும், பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்று சொன்னதாலும், பொதுவான நபரின் பாதுகாப்பில் தாமினியை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளோம். இந்த கோர்ட்டு மற்றும் இருதரப்பு வக்கீல்களின் சம்மதத்தின்படி, தாமினியை தங்கள் பாதுகாப்பில் வைக்க முடியுமா என்று வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்திடம் கேட்டோம்.
மீண்டும் விசாரணை
தாராள குணத்துடன் அதற்கு பிரசாத் சம்மதம் தெரிவித்தார். அதன்படி தாமினி ஒரு நாள் மட்டும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தங்க வேண்டும். 6–ந் தேதி (நாளை) பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் அறையில் மீண்டும் விசாரணை நடைபெறும். அப்போது தாமினி ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஈஸ்வரியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்து முடிந்த பிறகு அங்கிருந்த நிருபர்களுக்கு, சேரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மனுதாரர் தன்னை தாமினியின் மாமியார் என்று மனு தாக்கல் செய்துள்ளார். தாமினிக்கு திருமணமே நடக்காத நிலையில் எப்படி தன்னை தாமினியின் மாமியார் என்று கூற முடியும்? அதை ஏற்க முடியாது. காதலுக்கு நான் எதிரி அல்ல. மகளை நல்லவனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்ற அனைத்து பெற்றோரின் விருப்பம்தான் எனது விருப்பம். இதற்கு நீதிபதிகள்தான் வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சந்துருவின் சகோதரி பத்மா கூறியதாவது:–
எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சேரன் தரப்புக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். நாங்கள் ஆதரவில்லாமல் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments