வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு நடிகர் அஜீத் உதவி
நடிகர் அஜீத் ஓசையில்லாமல் நலிந்தோர் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்.
அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இது பற்றிய தகவல் தெரிந்ததும் அவர்களுக்கு உதவ அஜீத் முடிவு செய்தார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார். அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. அஜீத் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்ததால் பூமி பூஜையில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன.
அஜீத்தின் ஆரம்பம் பட பாடல்கள் நாளை (19-ந்தேதி) வெளியாக உள்ளன. தீபாவளிக்கு படம் ரிலீசாகிறது. இதில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார்.
0 comments