நெடுந்தீவில் கரை ஒதுங்கினர்:
பாம்பன் கடலில் மாயமான 7 மீனவர்கள்
ராமேசுவரம், ஜூன். 4:
45 நாள் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த இரு நாட்களாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். 2-ம் தினம் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 100 படகுகளில் பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் கரை திரும்பிய நிலையில் சகாயம் என்பவரது படகு மட்டும் திரும்பவில்லை.
அந்த படகில் அகஸ்டின், முருகன், செல்வம், முனிய சாமி, நல்லதம்பி, பூரணம் மற்றொரு முனியசாமி ஆகிய 7 பேர் சென்று இருந்தனர். 7 மீனவர்கள் மாயமான சம்பவம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கரை திரும்பிய மீனவர்களில் சிலர் தெரிவித்தனர். இதனால் அவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றிருக்கலாமா? என்ற அச்சம் ஏற்பட்டது.
இதற்கிடையே காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு திசைமாறி சென்று வேறு எங்காவது ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் ஜான்பிரிட்டோ, ஜெரோமியஸ், தேவசகாயம் ஆகியோரது படகுகளில் 21 மீனவர்கள் கடலுக்குள் மாயமான மீனவர்களை தேடி சென்றனர்.
இதற்கிடையில் மாயமான மீனவர்கள் படகுடன் நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பகுதி இலங்கை கடல் எல்லைக்குள் கச்சத்தீவு அருகே உள்ளது. இதனால் அங்கு இந்திய மீனவர்கள் செல்ல முடியாது. எனவே இலங்கை கடலோர காவல்படைதான் சென்று அந்த மீனவர்களை மீட்க முடியும். அவர்கள் மீட்டாலும் உடனடியாக விட்டு விடுவார்களா? அல்லது சர்வதேச எல்லையை தாண்டி விட்ட குற்றத்திற்காக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்களா? என்பது தெரியவில்லை. எனவே 7 மீனவர்கள் கரை திரும்புவதில் சிக்கலான நிலை உள்ளது.
0 comments