சீரமைப்பு பணி: 2 1/2 மாதத்திற்கு பாம்பன் ரோடு பாலம்
தினமும் 40 நிமிடம் மூடல்
ராமேசுவரம், ஜூன். 4:
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்னும் 2 1/2 மாதத்திற்கு பாம்பன் ரோடு பாலத்தில் தினமும் 40 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் ரோடு பாலம் கடந்த 1988-ம் ஆண்டு கட்டப்பட்டு அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. ரோடு பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்காகன வாகனங்கள் வந்து செல்கின்றன. சுமார் 2 1/2 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோடு பாலம் கடல் காற்றாலும், தொடர் பராமரிப்பு இல்லாததாலும் பழுதடைந்து காணப்பட்டன. இதனால் ரோடுகள், பில்லர்கள் பெயர்ந்து வந்தன.
இதைத்தொடர்ந்து பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அரசு ரூ.18.57 கோடியை ஒதுக்கியது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பராமரிப்பு பணிகள் தொடங்கின. தற்போது ரோடு பாலத்தில் உள்ள 74 தூண்களிலும் பேரிங் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. பேரிங் பொருத்தும்போது மட்டும் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. நேற்று முதல் இந்த பணிகள் தொடங்கி உள்ளன.
கடலில் காற்று வேகம் குறைந்து காணப்படும் போது இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் பாலத்தை மூடாமல், இடைவெளி விட்டு 10 நிமிடங்கள் என்ற அளவில் போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த பணிகள் இன்னும் 2 1/2 மாதத்துக்கும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments