இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 49 பேர்
காவல் 4-ந்தேதி வரை நீடிப்பு
ராமேசுவரம், ஜூன் 20:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களில் 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையிலும், 24 மீனவர்கள் அனுராதபுரம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட 49 மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய கோரி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 49 மீனவர்களும் இலங்கை மன்னார் கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 49 பேரையும் வருகிற 4-ந்தேதி வரை சிறை காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார்.
அதன்படி 49 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களுக்கு காவல் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
0 comments