உச்சிப்புளி இருமேனி கிராமத்தில்
வீடு புகுந்து
தொழில் அதிபரை கத்தியால் குத்தி கொள்ளை
பனைக்குளம், ஜூன் 20:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிபுளி அருகே உள்ளது இருமேனி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் தொழில் அதிபர் ராவுத்தர் என்பவருக்கு சொந்தமான மாடி வீடு உள்ளது.
இந்த வீட்டில் ராவுத்தர் தனது மனைவி ரகுமத் நிசாவுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் 4 முகமூடி கொள்ளையர்கள் ராவுத்தரின் வீட்டிற்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளனர்.
ராவுத்தரின் மனைவி ரகுமத் நிசா தூங்க செல்வதற்கு முன் வீட்டின் முன்புற கேட்டை மூடச்சென்றார். அப்போது வீட்டிற்குள் பதுங்கி இருந்த முகமூடி கொள்ளையர்கள் திடீரென பாய்ந்து சென்று ரகுமத் நிசாவை கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயற்சித்தனர். அப்போது ரகுமத் நிசா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கத்தினார்.
மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த ராவுத்தர் மனைவி கொள்ளையர்களுடன் போராடிக் கொண்டிருப்பதை பார்த்து தடுக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் ராவுத்தரை கத்தியால் குத்தி காயப்படுத்தினர். பின்னர் அவரது மனைவி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ராவுத்தரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து உச்சிபுளி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வீடு புகுந்து கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comments