கன்னட நடிகை சுருதி 2-வது திருமணம்
கொல்லூர் முகாம்பிகை கோவிலில் நடந்தது
மங்களூர், ஜூன் 7:
பிரபல நடிகை சுருதி, கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது பள்ளித்தோழரை தன் மகளின் முன்னிலையில் மறுமணம் செய்து கொண்டார்.
1990-ம் ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுருதி. தமிழில் "கல்கி" உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.
முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் கவுரி என்ற மகள் உள்ளார்.
அதன்பிறகு மகேந்தருக்கும், சுருதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சமீபத்தில் அரசியலில் இறங்கிய சுருதி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்து கடந்த தேர்தலின்போது தீவிர பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலை உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சுருதி திடீர் என்று வந்தார். அவருடன், பால்ய நண்பரான சந்திர சூட சக்கரவர்த்தியும் வந்திருந்தார். கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.
சந்திரசூட சக்கரவர்த்தி, கன்னட திரைப்பட இயக்குனராக இருக்கிறார். மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தை சுருதியின் மகள் கவுரி கேமராவில் படம் பிடித்தார்.
இந்த திடீர் திருமணம் குறித்து சுருதி கூறியதாவது:-
நானும், சந்திர சூட சக்கரவர்த்தியும் பள்ளியில் ஒன்றாக படித்தோம். அப்போதில் இருந்து எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. அந்த நட்பு தற்போது காதலாகி உள்ளது. அவர் என்னை நன்றாக புரிந்து கொண்டவர். எனவே நாங்கள் திருமணம் செய்து கொள்ள நல்ல நாளை தேடி காத்திருந்தோம். இன்று (நேற்று) என்னுடைய மகள் கவுரியின் பிறந்த நாள் என்பதால் இதை நல்ல நாளாக வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
சந்திரசூட சக்கரவர்த்தி எனக்கு மட்டுமல்ல, எனது மகளுக்கும் சிறந்த நண்பராக உள்ளார். என் மகளின் முழு விருப்பத்தின்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளோம். திருமணம் முடிந்தவுடன் நான் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்து கொள்ள செல்கிறேன்.
இவ்வாறு சுருதி கூறினார்.
சுருதியை போலவே சந்திர சூட சக்கரவர்த்தியும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கும் இது 2-வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments