தீயில் கருகி தந்தை-மகள் பலியான விவகாரம்: கியாஸ் நிறுவன ஊழியர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் முகம்மது கோயா தெருவை சேர்ந்தவர் சேக்அப்துல்காதர். இவரது மனைவி சுக்ராபீவி, மகன்கள் முகம்மது அர்சத், முகம்மது யூசுப், முகள் நூருல் அய்னுல்சாரியா (20). முகம்மது யூசப் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அவர்கள் வீட்டில் சிலிண்டரின் வாசர் சரியில்லாததால், கியாஸ் கசிவு ஏற்பட்டது. அதிகாலை எழுந்து மின் விளக்கை போட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்காதர், முகம்மது அர்சத், முகம்மது பீவி, நூருல் அய்னுல்சாரியா ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 4 பேரில் சேக் அப்துல்காதர், நூருல் அய்னுல்சாரியா ஆகிய இருவரும் இறந்தனர். சம்பவத்திற்கு காரணமாக கியாஸ் சிலிண்டரை கியாஸ் நிறுவனத்தினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். கியாஸ் சிலிண்டரில் வாசர் சரியாக இல்லாததால் கியாஸ் கசிந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சிலிண்டரை எடுத்துச்சென்ற கியாஸ் நிறுவனத்தினர், அதை சரி செய்து, மீண்டும் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைத்து விட்டனர். தற்போது ஆர்.எஸ்.மங்கலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை. திருவாடானை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் பொறுப்பு இன்ஸ்பெக்டராக உள்ளார்.
இதை பயன்படுத்தி, ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுச்சாமி, ஏட்டு தெய்வேந்திரன் இருவரும் கியாஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையறிந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனனிடம் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து கியாஸ் நிறுவன மானேஜர் சம்பத், ஊழியர் (டெலிவரி மேன்) முனியசாமி இருவரையும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் கைது செய்தார். கியாஸ் நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
0 comments