உச்சமான உட்கட்சி மோதல்.. தஞ்சாவூரில் டி.ஆர்.பாலுவை திமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு!
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவை திமுகவினரே தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்.. இந்த நிலையில் தஞ்சாவூர் பாச்சூர் துரைராசு மகன் பாரதிராஜா திருமணம் இன்று நடைபெற்றது. இந்த துரைராசு பழனி மாணிக்கத்தின் முன்னாள் ஆதரவாளர். தற்போது டி.ஆர்.பாலு முகாமில் துரைராசு இருப்பதால் பாலு ஆதரவாளர்களான எல். கணேசன், ஒரத்தநாடு காந்தி என ஏராளாமானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இதனால் டி.ஆர். பாலுவுக்கு புகழாரம் சூட்டுகிற நிகழ்ச்சியாக கல்யாண மேடை அமைந்தது. டி.ஆர். பாலுவும் பழனி மாணிக்கத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் தமிழகத்துக்கு தான் வாங்கிக் கொடுத்த திட்டங்களைப் பட்டியல் போட்டு அடுக்கினார். ஒருவழியாக கல்யாணம் முடிந்தது.
திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவை, பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் சூழ்ந்து கொண்டனர். இந்த கல்யாணத்துக்கு வரக்கூடாது என்று சொன்னேமே...என்று கேள்வி கேட்கப் போய் அது கைகலப்பாகிவிட்டது. கடுப்பாகிப் போன டி.ஆர்.பாலு தமது கல்லூரிக்கு விரைந்துவிட்டார்.
திமுக சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டையில் எல்.கணேசனின் நூல் வெளியீட்டு விழா, பேராவூரணியில் பொதுக்கூட்டம் என 2 நாட்கள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இன்று கைகலப்பு களைகட்டியதால் திமுகவினரிடையே கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.
0 comments