துரத்தும் ஐ.பிஎல்., சூது: சென்னையிலும் 6 இடங்களில் அதிரடி சோதனை
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சூதாட்டம் தொடர்பாக சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம் , வடசென்னை உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ரூ14 லட்சம் பறிமுதல்: டெல்லி போலீஸ் தந்த தகவல் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் ரூ.14 லட்சம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் 10 லேப்டாப், 5 ஒயர்லெஸ் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 பேருக்கும் டெல்லி, மும்பை, தென்ஆப்ரிக்கா, துபையில் இருக்கும் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை வளையத்தில் தொழிலதிபர் : சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் விருத்தாசலத்திடம் போலீசார் தீவி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது எப்படி: போட்டியின்போது அவர்கள் எப்படி சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை டெல்லி காவல் துறையினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 5 ஆம் தேதி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அஜித் சந்திலா தனது இரண்டாவது ஓவரில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். அந்த ஓவரில் சந்திலா 14 ரன்களை விட்டுகொடுத்ததாகவும், ஆனால், அந்த ஓவரை வீசுவதற்கு முன்னால், சூதாட்டத் தரகருக்கு அவர் முன்னறிவிப்பு செய்ய தவறியதால், அவரிடம் கொடுத்த பணத்தை, சூதாட்டத் தரகர்கள் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், தனது இரண்டாவது ஓவரை வீசுவதற்கு முன்னர், துண்டை இடுப்பில் சொருகி, சூதாட்ட தரகர்களுக்கு சைகை காட்டியதாகவும், ஆனால், 14 ரன்களுக்கு பதில் அவரால் 13 ரன்களை மட்டுமே அந்த குறிப்பிட்ட ஓவரில் விட்டுக்கொடுக்க முடிந்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய போட்டில் அங்கீத் சவான், தனது இரண்டாவது ஓவரின் போது 15 ரன்களை விட்டுக்கொடுத்ததாகவும், அந்த ஓவரை வீசுவதற்கு முன்பு தனது கைப்பட்டையை அசைத்து, சூதாட்டத் தரகருக்கு அறிவிப்பு செய்ததாகவும் நீரஜ்குமார் கூறியுள்ளார். ஆனால், இந்த சிக்னல்கள் அனைத்தும் விளம்பர இடைவேளையின் போது நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments