17 February 2014

இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கதினம்: டிரம்செட் வாசிக்க அனுமதி மறுத்ததால் கலவரம்;

இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கதினம்: 
டிரம்செட் வாசிக்க அனுமதி மறுத்ததால் கலவரம்; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டது.18 பேர் காயம் போலீசார் தடியடி – கண்ணீர்புகை குண்டு வீச்சு




இராமநாதபுரம்:

இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்க தினத்தில் டிரம்செட் வாசித்து செல்ல அனுமதி மறுத்ததால் கலவரம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.

இயக்க தினம்

இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் இயக்கதினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இராமநாதபுரத்தில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று பிற்பகல் குமரய்யா கோவில் அருகே மதுரை–இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சிலர் வெள்ளை சீருடை அணிந்து டிரம்செட் வாசித்தபடி நடந்து செல்ல முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளு உருவானது. மேலும் அவர்கள் போலீசாரின் தடையை மீறி டிரம்செட் வாசித்தபடி செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அப்போது கூட்டத்தின் பின்பகுதியில் இருந்து திடீரென கற்கள் வீசப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கலவரம் உருவானது. அசாதாரண சூழ்நிலை உருவானதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கடைகள் அடைப்பு


இந்த சம்பவத்தில் போலீஸ் தரப்பில் கமுதி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, ஆயுதப்படை பிரிவை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், திரவிய செல்வன், ஜெயமுகுந்தன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதுதவிர சாலையின் இருபுறமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.


இதுதவிர பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 9 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனே சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்த பகுதியில் இருந்த கடை ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.

நீதி விசாரணை தேவை

இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் கூறியதாவது:–


எங்கள் கட்சியின் இயக்க தினத்தையொட்டி சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் முன்கூட்டியே முறையான அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் கடைநிமிடத்தில் அனுமதி மறுத்து திட்டமிட்டு எங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திவிட்டனர்.

அணிவகுப்பு பேரணி நடத்த முயன்றபோது எங்களுக்கு சம்பந்தம் இல்லாத சிலர் கல்வீசி தாக்கி உள்ளனர். இவர்களில் 2 பேரை நாங்களே பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். பேரணி செல்லும் வழியில் பெட்ரோல் குண்டுகளுடன் சிலர் காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் மீது நம்பிக்கை இல்லாததால் எங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை ரத்துசெய்துள்ளோம்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரை கண்டித்து மாநில அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த அரசிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடையை மீறினர்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறியதாவது:–

இராமநாதபுரம் சின்னக்கடை சந்திப்பு பகுதியில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் சந்தைதிடல் பகுதிவரை மட்டுமே நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அரசு விதிகளின்படி சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டிரம்ஸ் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதனை மீறி தேசிய நெடுஞ்சாலையில் சீருடை அணிந்தபடி டிரம்செட் வாசித்தபடி செல்ல முயன்றதால் லேசான தடியடி நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவ பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங் மற்றும் இராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சேர்மானி ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top