சிங்கப்பூர் கலவர வழக்கில் கைதானவர்களில்
7 இந்தியர்கள் விடுவிப்பு: புதிதாக இருவர் சேர்ப்பு
சிங்கப்பூர், டிச. 17:
சிங்கப்பூரில் கடந்த 8-ம் தேதியன்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 16 போலீஸ் வாகனங்கள் உள்பட 25 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. போலீசார் உள்பட 39 பேர் காயமடைந்தனர்.
பின்னர் அப்பகுதிக்கு வந்த கூடுதல் போலீசார், இரண்டு மணி நேரத்திற்குள் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 40 வருடங்களில் நடக்காத இச்சம்பவத்தில் வெளிநாட்டினர் உள்பட 400 பேர் ஈடுபட்டுள்ளதாக சி.சி.டி.வி. ஆதாரத்துடன் போலீசார் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டிருந்த 33 பேரில், ஒரு வார காலம் சிறையிலிருந்த 7 பேர், விசாரணையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 26 பேரில் 21 பேரிடம் விசாரிப்பதற்கு போலீசாருக்கு மேலும் ஒரு வாரகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 வருட சிறை தண்டனையும், ரோத்தான் அடியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
0 comments