தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கொடுத்த தகவலின் பேரில்
ஆந்திரா மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது
9 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது
புத்தூர், அக். 5-
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது.
இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் போலீசார் சோதனையிட்டபோது தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டான். அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு வீட்டை தமிழக – ஆந்திர போலீஸ் படை இன்று அதிகாலை சுற்றி வளைத்தது.
அப்போது தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் அங்கு குடும்பத்துடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போல் அங்கு 6 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுடன் பெண்களும் இருந்தனர்.
போலீசார் முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றினார்கள். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த தெரு உள்ளிட்ட 4 தெருக்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அதிகாலை 4 மணிக்கு தமிழக இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.
போலீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டினார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருபுறம் துப்பாக்கி சண்டை நடந்தாலும், தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க காவல்துறை தீவிர முயற்சி செய்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், உடனடியாக வெடிக்கச் செய்து அப்பகுதியை தரைமட்டமாக்கிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எனவே, வெடிகுண்டு நிபுணர்கள் நிலைமையை கவனமாக கையாண்டனர்.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சண்டை பிற்பகல் வரை நீடித்தது. அதன்பின்னர் சுமார் 2 மணியளவில் தீவிரவாதிகளுடன் தங்கியிருந்த ஒரு பெண், 3 குழந்தைகள் மீட்கப்பட்டதை டி.ஜி.பி. நரேந்திர பால் சிங் உறுதி செய்தார். ஆனால், பாதுகாப்பு கருதி அவர்களை காவல்துறை அடையாளம் காட்டவில்லை.
இதற்கிடையே பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வீட்டினுள் பதுங்கியிருந்த பிலால், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை கைது செய்த போலீசார், ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே போலீஸ் பக்ருதீனை உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments