பாம்பன் மண்டபத்தில் கடல் கொந்தளிப்பு:
4–வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பாம்பன், டிச. 6:
தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பாம்பன், மண்டபத்தில் இன்று 4–வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக்கட லில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பனைமர உயரத்துக்கு மேல் எழும்புகிறது. இதன் காரணமாக இராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று 4 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
பலத்த காற்று வீசி வருவதால் கடற்கரையில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. மீன்வளத்துறை அதிகாரிகளும், மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
24 மணி நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் நாளை கடலில் இயல்பு நிலை திரும்பும் என்று மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். 4 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
0 comments