ஜான் எப்.கென்னடி படுகொலையில் புதிய திருப்பம்:
உயிரை பறித்த 'மர்ம தோட்டா' எங்கே?
நியூயார்க், நவ.12:
அமெரிக்காவின் 35–வது ஜனாதிபதி ஆக இருந்தவர் ஜான் எப் கென்னடி. ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1961 முதல் 1963–ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1963–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி தனது 46–வது வயதில் டெக்காஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டடார்.
அவர் இறந்து 50 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் ஜான் எப்.கென்னடியின் உயிரை பறித்த 'மர்ம தோட்டா' தொடர்பான திடுக்கிடும் தகவலை அவருக்கு முதலுதவி அளித்த நர்ஸ் ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அப்போது 28 வயது இளநங்கையாக இருந்த பைலிஸ் ஹால் என்ற அந்த நர்சுக்கு தற்போது 78 வயது ஆகிறது.
லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பைலிஸ் ஹால் கூறியுள்ளதாவது:-
தலையில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜான் எப்.கென்னடியின் தலையை தூக்கி பிடித்தபடி அவரது சுவாசம சீரடைவதற்கான முதலுதவியை நான் செய்தேன்.
அப்போது ஒரு விசித்திரமான காட்சியை நான் பார்த்தேன். துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த பலருக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், அன்று கண்டது போன்றதொரு காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.
அவரது காதுக்கும், தோள்பட்டைக்கும் இடையே கூர்மையான ஒரு விசித்திர தோட்டாவை நான் பார்த்தேன். அந்த தோட்டா சுமார் 1/2 அங்குல நீளம் இருந்தது.
சாதரணமாக துப்பாக்கியில் இருந்து வெடித்து சீறிப்பாயும் தோட்டாக்களின் முனை மழுங்கிப்போய் இருக்கும். ஆனால், அந்த தோட்டாவின் முனை மட்டும் கூர்மை மழுங்காமல் இருந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும், துப்பாக்கியின் குழலில் இருந்து வெளியேறும் வேகத்தில் தோட்டாவின் வெளிப்பகுதிகளில் சிராய்ப்பு (தேய்வது) அறிகுறி தென்படும். அதுவும் அந்த தோட்டாவில் தென்படவில்லை.
எந்தவகை துப்பாக்கியில் இருந்து அந்த தோட்டா வெளியே வந்தது என்ற அறிகுறிகளை அந்த தோட்டாவை பரிசோதித்து கண்டுபிடிக்க இயலாத நிலையில் அது இருந்தது.
ஜான் எப்.கென்னடி படுகொலை தொடர்பான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தோட்டாக்களில் இருந்து அது மிகவும் வித்தியாசமாக தோற்றமளித்தது.
அந்த தோட்டாவும் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால், கடைசி வரை அந்த 'மர்ம தோட்டா' கோர்ட் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படவே இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments