3 மணி நேரத்தில் அடுத்தடுத்து டெல்லியில் 4 முறை நிலநடுக்கம்
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.தெற்கு டெல்லி பகுதியில் நேற்று அதிகாலை 12.41 மணி முதல் 3.40 மணி வரை, அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 3.3 ஆக பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கம் சுமார் 10 முதல் 11 கி.மீ. தூரத்துக்கு உணரப்பட்டது. பூமத்திய ரேகையின் வடக்கு பகுதியில் 28.4 டிகிரி மற்றும் கிழக்கு பகுதியில் 77.4 டிகிரியிலும், இதற்கான மையம் அமைந்திருந்தது.முதல் நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவுகோலில் அதிகாலை 12.41 மணிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, 3 முறை அடுத்தடுத்து 3.3, 2.5 மற்றும் 2.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்த நிலநடுக்கம், முறையே அதிகாலை 1.41, 1.55 மற்றும் 3.40 மணியவில் ஏற்பட்டது என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை தெரிவித்தது. பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாலும், நிலநடுக்கம் சிறிய அளவில் இருந்ததாலும் உடனடியாக பரபரப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒருசில இடங்களில் விழித்திருந்த மக்கள் அலறியடித்து,
வீட்டை வெளியேறி வீதிக்கு வந்து நின்றனர். பின்னர், ஒருசில நிமிடங்களில் அவர்களும் வீடு திரும்பினர்.
வீட்டை வெளியேறி வீதிக்கு வந்து நின்றனர். பின்னர், ஒருசில நிமிடங்களில் அவர்களும் வீடு திரும்பினர்.
பார்யவரன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த ராஜன் ரிஷி கூறுகையில், ‘‘நான் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, வீடு திடீரென அதிர்ந்ததை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தேன். என்னுடைய குடும்பத்தினரையும் எழுப்பியதோடு, அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடினேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பியபோது, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்தது’’ என்றார்.
50 வயதான ராம் ஆதிர் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து 4 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதை இப்போதுதான் முதல்முறையாக அனுபவபூர்வமாக உணர முடிந்தது’’ என்று தெரிவித்தார்.
அதிகாலையில் 3 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஒருசில இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தது; வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது இடியோசை போல் கேட்டதாகவும், ஒருசிலர் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் நகரில் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவுமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண் நிறுவனமும், தீயணைப்புத் துறையும் தெரிவித்துள்ளன.
0 comments