19 October 2013

மோடி : டெல்லியில் மாற்றம் கொண்டு வர தமிழக மக்களும் முடிவு செய்து விட்டனர்

மோடி : டெல்லியில் மாற்றம் கொண்டு வர 
தமிழக மக்களும் முடிவு செய்து விட்டனர்



சென்னை:

பாஜ கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நேற்று மதியம் 3.10க்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். அவரை வரவேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். 

விமான நிலையம் வந்த நரேந்திர மோடியை பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் தமிழிசை சவுந்திரராஜன், ஹெச்.ராஜா, மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாநில இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில வர்த்தக பிரிவு துணை தலைவர் வி.எஸ்.ஜே.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.பின்னர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் பாஜ தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசியதாவது:தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று வடமாநிலத்தில் உள்ளவர்கள் நம்பவில்லை. ஆனால் கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை பார்த்த பின்பு அந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிக்கான பெருமை தமிழக மக்களையும், பாஜ செயல் வீரர்களையுமே சாரும்.

இன்று இந்திய மக்களின் கனவு காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு அமைய வேண்டும் என்பதுதான். உங்கள் மூலம் அந்த கனவு நிறைவேறும். சென்ற வாரம் ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் மிக பெரிய சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளியால் அந்த பகுதியே நாசமாகிவிடும் என்று நினைத்தனர்.ஆனால் அங்கு எந்தவித பேரழிவும் ஏற்படாமல் அமைதியும், நிம்மதியுமான சூழ்நிலை நிலவியது. இந்த சூறாவளி ஏன் தாக்க முடியவில்லை என்றால் மாற்றத்திற்கான அலை அதை தடுத்து நிறுத்தி விட்டது. இன்றைக்கு உலகமே எள்ளி நகையாடும் வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறி தோண்டுகிறார்கள். இந்த நாட்டில் உள்ளவர்கள் கொள்ளையடித்து ஓராயிரம் டன்னுக்கும் மேல் தங்கத்தை சுவிஸ் வங்கியில் கொண்டு வைத்துள்ளனர்.அந்த கொள்ளையை தடுத்து சுவிஸ் வங்கியில் இவர்கள் வைத்துள்ள தங்கத்தை இங்கு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இந்திய அரசாங்கம் கீழ்த்தரமாக புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. நான் தமிழக மக்களை பார்த்த பிறகு எனக்கு ஒன்று தெரிகிறது. தமிழக மக்களும் டெல்லியில் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துவிட்டனர். பாஜ ஆட்சி டெல்லியில் ஏற்பட்டால் தமிழக மக்களின் கனவை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

கொளுத்தும் வெயிலில் பேசிய மோடி

              சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொண்டர்கள் அனைவரும் 7 கட்ட சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொண்டர்கள் பாஜ கொடி மற்றும் காவி தலப்பா அணிந்து மேள தாளத்துடன் மோடியை வரவேற்க வந்திருந்தனர். அவரை வரவேற்க கொளுத்தும் வெளியிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அதேபோன்று அங்கு அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி மேடையில் மோடியும் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டே தொண்டர்கள் மத்தியில் 15 நிமிடம் பேசினார். அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்தும், கிரீடம் மற்றும் செங்கோல் வழங்கியும் வரவேற்றனர்.

3 மொழிகளில் பேசினார்

              தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசும் போது தமிழில் வணக்கம் என்று கூறினார். அதை வரவேற்று தொண்டர்கள் கோஷம் எழுப்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோன்று, பாஜ நிர்வாகிகளை மோடி வரவேற்று பேசும்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பேசினார்.

12 மணி முதலே போக்குவரத்து நெரிசல்

                சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 12 மணி முதலே தொண்டர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் விமான நிலையம் முன்பு செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள்  ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. விமான நிலையத்தில் இருந்து மோடி சென்ற பின்னரே போக்குவரத்தை போலீசார் சிறிது சிறிதாக சரி செய்தனர்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top