கச்சத்தீவு அருகே மீன் பிடித்த இராமேசுவரம் மீனவர்கள் மீது
இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
இராமேசுவரம், அக். 22:
இராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பது, வலைகளை அறுத்து கடலில் வீசுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது தொடர் கதையாகி விட்டது.
இதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மீனவர்களை தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீனவர்கள் மத்திய–மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
நேற்று இராமேசுவரத்தில் இருந்து 400 விசைப்படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது சிங்கள கடற்படையினர் 30 பேர் 5 குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது கற்கள், சோடா பாட்டில்களை சரமாரியாக வீசி விரட்டியடித்தனர்.
இதனால் உயிருக்கு பயந்துபோன மீனவர்கள் அவசர அவசரமாக அவர்களது வலைகளை எடுத்துக் கொண்டு கரை திரும்ப முயன்றனர். ஆனால் சிங்கள கடற்படையினர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். இதனால் மீனவர்கள் வெறுங்கையுடன் இன்று காலை கரை திரும்பினர்.
படகில் இருந்த மீன்களை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டதால் மீனவர்கள் கண்ணீர் வடித்தனர். சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து அவர்கள் போலீ சிலோ, மீன்வளத்துறை அதிகாரிகளிடமோ எந்த புகாரும் செய்யவில்லை.
0 comments