பிளாக் இந்தியன் என்று திட்டிய வெளிநாட்டு பெண் மீது
வினோத் காம்ப்ளி புகார்
மும்பை:
‘பிளாக் இந்தியன்’ என்று தன்னை திட்டிய வெளிநாட்டு பெண் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி போலீசில் புகார் கொடுத்தார்.மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்த்ராவில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி வசித்து வருகிறார்.
இங்கு, வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, ஹவுசிங் சொசைட்டியில் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக, வினோத் காம்ப்ளிக்கும் அந்த வெளிநாட்டு பெண்ணுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, ‘ஏதேனும் பிரச்னை இருந்தால் சொசைட்டி செயலாளரிடம் சொல்லுங்கள்’ என்று அந்த பெண்ணிடம் காம்ப்ளி கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண் காம்ப்ளியை பார்த்து பிளாக் இந்தியன் என்று திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டது; அதனால், அந்த வெளிநாட்டு பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்திருப்பதாக காம்ப்ளி கூறினார். மேலும், அந்த பெண்ணுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக, தன்னிடம் போலீசார் உறுதியளித்ததாகவும் காம்ப்ளி தெரிவித்தார்.
0 comments