மாட்டுதீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு
லல்லு பிரசாத் யாதவ் உள்பட 45 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
பாட்னா, செப். 30:
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் 1990 –ம் ஆண்டு பீகார் முதல்– மந்திரியாக இருந்தபோது அவர் மீது மாட்டுத்தீவன ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அப்போது பீகாரின் ஒரு பகுதியாக இருந்த தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி ரசீதுகளை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
லல்லு பிரசாத் யாதவுடன், பீகார் முன்னாள் முதல்– மந்திரி ஜெகன்னாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்பட மொத்தம் 45 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 1996–ல் சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்கியது. இதையடுத்து 1997–ல் லல்லு தனது முதல்– மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். லல்லு மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி பிரவாஸ்குமார் விசாரித்தார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக்கோரி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் லல்லு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான மனுக்களை இரண்டு கோர்ட்டுகளும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் லல்லு தரப்பு வக்கீல் தனது வாதத்தை கடந்த 17–ந்தேதி முடித்துக் கொண்டார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது லல்லு பிரசாத் யாதவ் மற்றும் 44 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். மாட்டுதீவன ஊழல் வழக்கில் லல்லுபிரசாத் யாதவ் மற்றும் 44 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி பிரவாஸ்குமார் தீர்ப்பு கூறினார். லல்லு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா உள்பட 45 பேர் மீதான தண்டனை விவரம் வருகிற 3–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
லல்லு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
45 பேரும் குற்றவாளிகள்
ரூ. 37.7 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில் 45 பேரும் குற்றவாளிகள் என்று ராஞ்சி சி.பி.ஐ கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. பீகார் முன்னாள் முதல்– மந்திரிகள் லல்லுபிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்பட 6 அரசியல்வாதிகள், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆக மொத்தம் 45 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கோர்ட் தீர்ப்பு முழுமையாக கிடைத்தவுடன் மேல் முறையீடு (அப்பீல்) செய்வோம் என்று லல்லுவின் வக்கீல் தெரிவித்தார்.
0 comments