தரங்கம்பாடி அருகே பலாத்கார முயற்சியில்
இளம் பெண் தற்கொலை: 2 பேர் கைது
குத்தாலம், செப்.30:
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35). இவரது மனைவி விஜயராணி (26). இவர்கள் குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் வேலி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. புஷ்பராஜ் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் விஜயராணியிடம், பாலச்சந்தரும், ரவிச்சந்திரனும் தகராறு செய்தனர். அப்போது தட்டிக்கேட்க வந்த புஷ்பராஜியின் தந்தை கணபதியையும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயராணி வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி விஜயராணி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த விஜயராணி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது விஜயராணி, போலீசாரிடம் கூறியதாவது:–
எனது கணவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் என் கையைப் பிடித்து இழுத்தனர். இதனால் மனவேதனை ஏற்பட்டு, மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயராணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
பாலச்சந்திரன் மயிலாடுதுறை கிளை சிறையிலும், ரவிச்சந்திரன் மைனர் என்பதால் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
0 comments